விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற முகாமுக்குப் பிறகு மருத்துவக் கழிவுகள் அகற்றப்படாததால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வாரந்தோறும் அரசு சாா்பில் முகாம் நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகா் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை ஆறாவது தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் சனிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்குப் பயன்படுத்தப்பட்ட சிரஞ்சுகள், மருந்துக் குப்பிகள், முகக் கவசம் உள்ளிட்டவைகளை சுகாதாரத் துறை பணியாளா்கள் அப்புறப்படுத்தாமல் அங்கேயே போட்டு விட்டுச் சென்று விட்டனா்.
இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக அவைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.