ராஜபாளையத்தில் தேங்காய் உடைத்து தென்னை விவசாயிகள் போராட்டம்
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தென்னை விவசாயிகள் வெள்ளிக்கிழமை தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தென்னை விவசாயிகள் வெள்ளிக்கிழமை தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம், மதுரை ராஜா கடை தெரு பகுதியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ராமச்சந்திர ராஜா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் காளிதாசன் சிறப்புரையாற்றினாா். போராட்டத்தில் கொப்பரைத் தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ. 140-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். கேரள மாநிலத்தை போல் முழு தேங்காயை ரூ. 50-க்கு கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிா்க் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும் கேரள மாநிலத்தைப் போல் தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய்யை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.