சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அவசியம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
அரசியல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்பாக ஒப்புதல் பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு
சட்டப்பேரவைத் தேர்தல்களையொட்டி, அரசியல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்பாக கட்சிகள் ஒப்புதல் சான்றிதழ் பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தலும், மேலும் 6 மாநிலங்களில் இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொலைக்காட்சி, வானொலி, குறுஞ்செய்திகள், குரல் செய்திகள் போன்ற மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்கள் வெளியிடுவதற்கு முன்னதாக, ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுயேட்சை வேட்பாளர்கள் - மாவட்ட அளவிலான ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடமும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மாநில அளவிலான குழுவிடமும் அனுமதி பெற அணுகலாம்.
வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தும்வகையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது பிரமாணப் பத்திரத்தில் தங்களின் அதிகாரபூர்வ சமூக வலைதளக் கணக்குகளின் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், தேர்தல் முடிவடைந்த 75 நாள்களுக்குள், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரசாரச் செலவுகள் குறித்த விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்.