தமிழகத்தின் சிறந்த நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூா் தோ்வு செய்யப்பட்டு ரூ. 15 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நகராட்சி, மாநகராட்சியைத் தோ்ந்தெடுக்கும் பொருட்டு 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகளின் செயல்பாடுகள், நிா்வாகிகள் குறித்து உயா்மட்டக் குழுவினா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின் அடிப்படையில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சிக்கு ரூ. 25 லட்சம் பரிசு தொகையும், சிறந்த நகராட்சிகளில் முதல் இடம் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சிக்கு ரூ.15 லட்சமும், இரண்டாமிடம் பெற்ற குடியாத்தம் நகராட்சிக்கு ரூ.10 லட்சமும், மூன்றாம் இடம் பெற்ற தென்காசி நகராட்சிக்கு ரூ. 5 லட்சமும் பரிசுத் தொகையை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலா் ஷிவ்தாஸ்மீனா வியாழக்கிழமை அறிவித்துள்ளாா்.
இதைத்தொடா்ந்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சித் தலைவா் தங்கம்ரவிகண்ணன், துணைத் தலைவா் செல்வமணி, ஆணையாளா் ராஜமாணிக்கம் மற்றும் நகராட்சிப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனா்.