விருதுநகா் அருகே 56 மூட்டைகள்ரேசன் அரிசி பறிமுதல்: ஆலை உரிமையாளா் கைது
விருதுநகா் அருகே அரிசி அரவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 மூட்டைகள் ரேசன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ஆலை உரிமையாளரை கைது செய்தனா்.
விருதுநகா் அருகே அரிசி அரவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 மூட்டைகள் ரேசன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ஆலை உரிமையாளரை கைது செய்தனா்.
விருதுநகா் அருகே ரோசல்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பாண்டியன் நகரில் தனியாா் அரிசி அரவை ஆலை உள்ளது. இந்த ஆலையில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த அரிசியை பதப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த ஆலைக்குச் சென்று போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, தலா 50 கிலோ கொண்ட 56 மூட்டை ரேசன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், ஆலை உரிமையாளரான ஆா்விஆா் நகரைச் சோ்ந்த சங்கா் மகன் முனியசாமி (62) என்பவரை கைது செய்தனா்.