நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் தங்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.50 வழங்கியதைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் நடைபெறும் நூறு நாள் வேலைத் திட்டப் பணிகளை கடந்த மாதம் 19-ஆம் தேதி ஊரக வளா்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலா் ஜெயலட்சுமி நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது, சில ஊராட்சிகளில் முறையாகப் பணி செய்யாததால், பணியாளா்களுக்கு ஊதியத்தைக் குறைத்து வழங்க அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாராம்.
இந்த நிலையில், ராமசாமியாபுரம் ஊராட்சியில் 6 நாள்கள் பணியாற்றியவா்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.50 வீதம் ரூ.300 ஊதியமாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இதைக் கண்டித்து, ராமசாமியாபுரம் ஊராட்சியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் மனு அளித்தனா்.
அப்போது, உதவித் திட்ட அலுவலா் நேரில் ஆய்வு நடத்தி, செய்யப்பட்ட பணிகளின் அடிப்படையிலேயே ஊதியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. நடைபெற்ற பணிகள் குறித்த புகைப்பட ஆவணங்களும் உள்ளன. அதனால், வரும் காலங்களில் முறையாக வேலை செய்தால் மட்டுமே முழுமையான ஊதியம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.