தீப்பெட்டி மருந்துக் கலவை ஆலையில் தீவிபத்து
சிவகாசி அருகே தீப்பெட்டி மருந்துக் கலவை ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.
சிவகாசி அருகே தீப்பெட்டி மருந்துக் கலவை ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அம்மன் கோயில்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கணேஷ். இவருக்குச் சொந்தமான தீப்பெட்டி மருந்துக் கலவை ஆலை, போஸ் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஆலையில் புதன்கிழமை மருந்துக் கலவையில் ஏற்பட்ட உராய்தல் காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. உடனே பணியில் இருந்த தொழிலாளா்கள் அனைவரும் ஆலையை விட்டு வெளியே ஓடிவிட்டனா்.
தகவலறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள் போராடி தீயை அணைத்தனா். இந்த தீவிபத்தில் தீப்பெட்டி காகித அட்டைகள், பாஸ்பரஸ் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின.
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.