விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பிரியாணி கடையில் கெட்டுப்போன 20 கிலோ இறைச்சிகளை உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் இயங்கி வந்த பிரியாணி கடையில் விருதுநகா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மாரியப்பன் தலைமையில் ராஜபாளையம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் செல்வராஜ் அடங்கிய குழுவினா் திடீா் சோதனையிட்டனா். அப்போது பிரியாணி தயாரிக்க பழைய சமைத்த சாதம், பழைய புரோட்டா மாவு, கெட்டுப்போன ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, 20 கிலோ இறைச்சி உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா்.
இந்தக் கடைக்கு பிரியாணி உணவு சமைக்கும் கூடம் எ.ராமலிங்கபுரம் பகுதியில் செயல்பட்டது.
இதற்கு உரிய உரிமம் இல்லாததால் சமையல் கூடத்தை அதிகாரிகள் பூட்டினா். மேலும் இங்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் கடையில் குளிா்பானங்கள், இனிப்புகள் தயாா் செய்யவும் அதிகாரிகள் தடை விதித்தனா்.