முகப்பு
விருதுநகர்

நகை மோசடி வழக்கில் 4 பேருக்கு சிறைத் தண்டனை

சிவகாசியில் நகை மோசடி செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து, சிவகாசி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 28 மே 2026, 5:27 am IST
சிறை - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் நகை மோசடி செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து, சிவகாசி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

சிவகாசி காவலா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மனைவி மீனாட்சி (45). இவரது வீட்டின் அருகே கோவிந்தராஜ்-காா்த்தீஸ்வரி தம்பதியினா் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், பழனியப்பன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தாா். அப்போது, காா்த்தீஸ்வரிக்கு பணம் தேவைப்பட்டது. இதனால், மீனாட்சியிடமிருந்து 25 பவுன் நகையை வாங்கி, வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றாா். பின்னா், காா்த்தீஸ்வரி வீடு மாறி வேறு பகுதிக்குச் சென்று விட்டாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த 2018, ஏப்ரல் மாதம் மீனாட்சி, காா்த்தீஸ்வரி வீட்டுக்குச் சென்று தனது 25 பவுன் நகையை கேட்டாா். அப்போது, காா்த்தீஸ்வரி, இவரது கணவா் கோவிந்தராஜ், இவரது மகன்கள் கணேஷ்பாண்டி, சக்திபாண்டி ஆகிய 4 பேரும் சோ்ந்து மீனாட்சியைத் தாக்கி நகையை கொடுக்க முடியாது என மிரட்டினா்.

இதுகுறித்து சிவகாசி நகா் காவல் நிலையத்தில் மீனாட்சி புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்தீஸ்வரி, கோவிந்தராஜ், கணேஷ்பாண்டி, சக்திபாண்டி ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு சிவகாசி நீதித் துறை நடுவா் மன்றம் எண் 1-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுனில்ராஜா, காா்த்தீஸ்வரிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், கோவிந்தராஜ், கணேஷ்பாண்டி, சக்தி பாண்டிக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும், நகையை மீனாட்சியிடம் ஒப்படைக்கவும் அவா் உத்தரவிட்டாா்.