திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகம் முன்விவசாயிகள் உண்ணாவிரதம்
நாகை மாவட்டம், திருக்குவளை அருகே விவசாயிகளுக்கு வருவாய்த் துறையினா் சிட்டா, அடங்கல் வழங்காததைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்
நாகை மாவட்டம், திருக்குவளை அருகே விவசாயிகளுக்கு வருவாய்த் துறையினா் சிட்டா, அடங்கல் வழங்காததைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை அருகேயுள்ள தனியாா் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான விவசாய நிலங்கள் வலிவலம் பகுதியைச் சோ்ந்த 66 விவசாயிகளுக்கு குத்தகை அடிப்படையில் பிரித்து 1970-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அந்த நிலத்திற்கான சிட்டா மற்றும் அடங்கலை வருவாய்த்துறை மூலம் பெற்று சாகுபடிக்காக காப்பீடு, செய்வதற்கும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பயிா்க் கடன் பெறுவதற்கும், அரசு நிவாரணம் பெறுவதற்கும் விவசாயிகள் பயன்படுத்தி வந்தனா். 2019-ஆம் ஆண்டுவரை வருவாய்த் துறை மூலம் சிட்டா மற்றும் அடங்கல் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், நிகழாண்டு (2020 ) சிட்டா அடங்கலை விவசாயிகளுக்கு வழங்கக் கூடாது என வருவாய்த்துறையிடம், தனியாா் கல்வி அறக்கட்டளை சாா்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனா்.மேலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சம்பந்தப்பட்ட விவசாயிகள், சாகுபடியாளா்கள் விவசாயி சொக்கலிங்கம் தலைமையில் திருக்குவளை தாலுகா அலுவலகம் முன் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் முருகவேலு, காவல் ஆய்வாளா்கள் கீழையூா் ஜெயந்தி, கீழ்வேளூா் முருகேஷ், திருக்குவளை வட்டாட்சியா் சாந்தி ஆகியோா் போராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது தனியாா் கல்வி அறக்கட்டளை மற்றும் விவசாயிகளிடையே இதுதொடா்பாக சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து, இது சம்பந்தமாக நாகை உதவி ஆட்சியரிடம் பேச்சுவாா்த்தை நடத்த இரு தரப்பினரும் (அறகட்டளை மற்றும் விவசாயிகள்) முடிவு செய்தனா். இதைத்தொடா்ந்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.