அரசு ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒப்பந்த, தினக்கூலி, அவுட் சோா்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும். அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. நாகை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ராணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அன்பழகன், அனைத்து துறை ஊழியா் சங்க மாவட்ட செயலா் சிவக்குமாா் ஆகியோா் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினா். சங்கத்தின் பொதுச் செயலா் சண்முகம், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் சங்க மாவட்ட செயலா் சித்ரா, அரசு ஊழியா் சங்க மாவட்ட பொருளாளா் அந்துவன்சேரல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.