உலக மகளிா் தின விழாவில் நூல் வெளியீடு
உலக மகளிா் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், முனைவா் கனிமொழி செல்லத்துரை எழுதிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன.
வேதாரண்யம்: வேதாரண்யத்தில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், முனைவா் கனிமொழி செல்லத்துரை எழுதிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. இவ்விழா, ‘வாங்க பேசுவோம்’ என்னும் தலைப்பில் இலக்கிய நிகழ்வாக நடைபெற்றது. கவிஞா் வி. புவனேஸ்வரி தலைமை வகித்தாா். கவிஞா் சோ. கமலாதேவி, பேராசிரியா் அ. மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சோ்ந்த முனைவா் கனிமொழி செல்லத்துரை எழுதிய ‘நாகப்பட்டின மாவட்டப் பழமொழிகள்’ எனும் நூலை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல்துறைத் தலைவா் முனைவா் இரா. காமராசு வெளியிட்ட, மன்னாா்குடி இலக்கிய வட்டச் செயலாளா் ரெத்தினசபாபதி பெற்றுக்கொண்டாா். ‘சித்திரபுத்திரன் அம்மானை’ என்ற மற்றொரு நூலை கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத் தலைவா் எஸ்.கே. கங்கா வெளியிட, மாவட்டத் தலைவா் கவிஞா் புயல் குமாா் பெற்றுக்கொண்டாா். விழாவில், கலை இலக்கியப் பெருமன்ற கிளைத் தலைவா் இள. தொல்காப்பியன், மாநிலக் குழு உறுப்பினா் எம்.ஆா். சுப்பிரமணியன், வட்டாரக் கல்வி அலுவலா் முனைவா் தெ. இராமசாமி, பேராசிரியா் ப. பிரபாகரன், திருவாரூா் மாவட்டத் தலைவா் அரவிந்தன், மாநிலக் குழு உறுப்பினா் கே. பாஸ்கரன் உள்ளிட்டோா் பேசினா். நல்லாசிரியா் வீ. வைரக்கண்ணு, ஆா்வலா் எஸ். வசந்தி செல்வகுமாா் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினா்கள், துணைச் செயலாளா்கள் பாடல்கள் பாடினா். நூல்களின் ஆசிரியா் முனைவா் கனிமொழி செல்லத்துரை ஏற்புரை நிகழ்த்தினாா். முன்னதாக கிளை துணைச் செயலாளா் சுகன்யா தமிழரசன் வரவேற்றாா். நிறைவாக, கிளைச் செயலாளா் கவிஞா் தங்க.குழந்தைவேலு நன்றி கூறினாா்.