நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பெயர் எழுதிய பேருந்து பறிமுதல்!
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பெயர் எழுதிய பேருந்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தது குறித்து...
கோவை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பெயர் எழுதிய பேருந்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், வாகனங்களில் வன்முறையை தூண்டும் வாசகங்கள் எழுதினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தனர்.
கோவையை அடுத்து குரும்ப்பாளையத்தில் இருக்கும் எஸ்.என்.எஸ் கல்லூரி மாணவர்கள் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர். அந்த பேருந்தில் மாணவர்கள் பாட்டுப்பாடி நடனமாடி மகிழ்ச்சியாக சென்றனர். அந்த பேருந்து கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் அருகே உள்ள பகவான் ஹால் பகுதியில் சென்ற போது திடீரென போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, அந்தப் பேருந்தில் முன் பகுதியில் நிழல் உலக தாதா என்று அழைக்கப்படும் தாவூத் இப்ராஹிம் பெயர் எழுதப்பட்டு இருந்தது. மேலும் டான் அண்டர்வேல்டு என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தவிர பல வாசகங்கள் இடம் பெற்று இருந்தன
Advertisement
Advertisement
இதையடுத்து போலீசார் அந்த பேருந்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் அந்த பேருந்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அத்துடன் போலீசார் அந்த பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தனர். அதில் இருந்த மாணவர்கள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து கோவை காவல் அதிகாரிகள் கூறியதாவது:
பேருந்துகள் மற்றும் வாகனங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் மட்டுமே எழுதப்பட்டு இருக்க வேண்டும். வாகனங்களில் எழுதும் வாசகங்கள் வன்முறையை தூண்டும் வகையில் இருக்கக் கூடாது. அப்படி எழுதப்பட்டிருப்பது வாகன சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக கோவை மாநகரம் மற்றும் புறநகர பகுதிகளில் வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர்கள் கூறினர்.