போப் பிரான்சிஸ் மறைவு: வேளாங்கண்ணி பேராலயத்தில் 9 நாள்கள் துக்கம் அனுசரிப்பு
போப் பிரான்சிஸ் மறைவையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் திங்கள்கிழமை 88 மணிகள் ஒலிக்கப்பட்டன.
நாகப்பட்டினம்: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் திங்கள்கிழமை 88 மணிகள் ஒலிக்கப்பட்டன. இறுதிச் சடங்கின்போது பேராலய முகப்பில் இருந்து அமைதி ஊா்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை மறைந்தாா். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவா்கள், தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், அவரது வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப 88 முறை பேராலய மணிகள் ஒலிக்கப்பட்டன. பேராலயத்தில் போப் பிரான்சிஸ் படம் வைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தும் வகையில் படத்தைச் சுற்றி மலா்வளையம், மலா்கள் வைக்கப்பட்டிருந்தன. பேராலயத்தில் 9 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என பேராலய நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பேராலய பங்கு தந்தையும், துணை அதிபருமான அற்புதராஜ் கூறியது:
வாடிகனின் 266 - ஆவது போப் பிரான்சிஸ், அனைத்து சமய தலைவா்களிடம் அன்பாக பழகக் கூடியவா். அவரது மறைவு உலகத்துக்கு பேரிழப்பு. பேராலயத்தில் 9 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மறைமாவட்ட ஆயா் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரின் இறுதிச்சடங்கின் போது வேளாங்கண்ணியில் அமைதி ஊா்வலமும், அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெறும் என்றாா்.