நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி கடலில் குளித்த ஹைதராபாத் இளைஞா், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்
பஞ்னசாயிரி கில்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் தன்ராஜ் (33) . இவா், தனது மனைவி மற்றும் அண்ணன் குடும்பத்துடன் திங்கள்கிழமை காலை வேளாங்கண்ணிக்கு வந்தாா். அங்கு, பேராலயத்தில் பிராா்த்தனையை முடித்துவிட்டு, மாலையில் தன்ராஜ் மற்றும் குடும்பத்தினா் வேளாங்கண்ணி கடலில் குளித்தனா்.
அப்போது, கடல் அலையில் சிக்கி தன்ராஜ் மூழ்கினாா். அங்கு பணியில் இருந்த கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா், தன்ராஜை மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், தன்ராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கடற்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.