பணி நிரந்தரம் கோரி, காரைக்காலில் தொகுப்பூதிய ஊழியர்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் தொகுப்பூதிய ஊழியர் சங்கத் தலைவர் வி. சரவணன் தலைமை வகித்தார். போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகள்
கூறியது:
வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிவருகிறோம். தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் தங்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி அரசு தங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18,000 வழங்கவேண்டும் என வலியுறுத்தினர்.
இக்கோரிக்கைகள் குறித்து நீண்ட காலமாக அரசுக்கு வலியுறுத்தப்பட்டும், சாதகமான பதில் வராததால் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதன்பிறகும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நிர்வாகிகள் அனைவரும் கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவிப்போம் என்றனர்.