கடந்த ஆண்டுக்கான வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி திட்டப் பயன்கள் விவசாயிகளுக்கு இதுவரை கிடைக்காததற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியது என திமுக விவசாய அணி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் திமுக விவசாய அணி அமைப்பாளர் என். ராமசாமி வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் மாவட்டத்தில் பெய்து வரும் மழை தற்போது விவசாயிகளை பாதிப்படையச் செய்து வருகிறது. கடந்த ஆண்டுக்கான வறட்சி இதுவரை கிடைக்காதது, நிகழாண்டு நேரடி நெல் விதைப்பு, ஆழ்குழாய் கிணறு மூலம் நாற்று விட்டு நடவு செய்த நிலங்கள், பாசன வடிகால் சரியில்லாமல் பயிர்கள் அழுகி இருக்கும் நிலை விவசாயிகளுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் துயரத்தை போக்க முன்வர வேண்டும். மாநில அரசை ஆளுநர் மூலம் மத்திய அரசு சிரமப்படுத்திக் கொண்டிருப்பது விவசாயிகள், வணிகர்கள், ஏழை மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இப்போக்கு கண்டனத்துக்குரியது.
ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை, மத்திய அரசின் கொள்கைக்கு கொண்டுவர, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது ஜனநாயகத்துக்கு விரோதமானது. மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான மனக் கசப்புகளால் மாநிலத்தில் விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளன.
கடந்த ஆண்டுக்கான வறட்சிக்கு இதுவரை மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்கவில்லை. கடன் தள்ளுபடி என்ற அரசின் அறிவிப்பு மூலம் நிம்மதியடைந்தனர் விவசாயிகள். ஆனால் உரிய தொகையை கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு செலுத்தாததால் புதிதாக கடன் பெறமுடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் மேலும் காலம் தாழ்த்தாமல், அடுத்த ஓரிரு வாரங்களில் வறட்சி நிவாரணம், காப்பீடுத்தொகையை விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.