முகப்பு
காரைக்கால்

காரைக்கால் பகுதிக்கான காவிரி நீரை முழுமையாக பெற வேண்டும்: வேளாண் செயலரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

காரைக்கால் பகுதிக்குரிய காவிரி நீரை புதுச்சேரி அரசு முழுமையாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண் துறை செயலரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

காரைக்கால் பகுதிக்குரிய காவிரி நீரை புதுச்சேரி அரசு முழுமையாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண் துறை செயலரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.
காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை வந்த புதுச்சேரி வேளாண் துறை செயலர் டி. மணிகண்டன், காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
நெடுங்காடு பகுதி நாட்டார் வாய்க்கால் பாசனதாரர் சங்கப் பிரதிநிதிகள் துறை செயலரை நேரில் சந்தித்துப் பேசினர். மேட்டூர் அணை திறக்கப்பட்டு கல்லணை வந்த நீர், காரைக்காலுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு நுழைந்தது. பின்னர் நீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. இதுவரை நெடுங்காடு பகுதி நாட்டார் வாய்க்கால் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்துக்குத் தேவையான நீர் கிடைக்கவில்லை. புதுச்சேரி அரசுத் துறையினர், தமிழக அரசு நீர்ப்பாசனத் துறையினரை சந்தித்துப் பேசி, காரைக்காலுக்குரிய காவிரி நீர் முழுமையாக காலத்தோடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த 2015-16 -ஆம் ஆண்டுக்கான ஊக்கத் தொகை மற்றும் 2016-17 -ஆம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, அரசு அறிவித்த வறட்சி நிவாரணம் உடனடியாக கிடைக்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களில் விவசாயிகளுக்கு கடன் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். பாசிக் நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து இடுபொருள்கள் தாராளமாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
நிகழாண்டு காரைக்கால் பகுதியில் விவசாயம் செழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் புதுச்சேரி அரசு எடுக்க வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினர்.
வறட்சி நிவாரணம் வழங்கல் உள்ளிட்ட பணிகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் உரிய வகையில் கிடைக்கவும் அரசு ஏற்பாடு செய்யும். விவசாயிகள் தெரிவித்த கருத்துகளை துறை நிர்வாகம் சீரிய முறையில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் மணிகண்டன்.
இந்த சந்திப்பின்போது, மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ், துணை ஆட்சியர் (பொ) எஸ்.கே. பன்னீர்செல்வம், கூடுதல் வேளாண் இயக்குநர் கா. மதியழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →