நலத்திட்ட உதவிகளை தாமதமின்றி வழங்கக் கோரி காரைக்காலில் அதிமுகவினர் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா தலைமையில், காரைக்கால் பேருந்து நிலையம் அருகேயுள்ள பாரதியார் சாலையில் இப்போராட்டம் நடைபெற்றது. இலவச அரிசி தாமதமின்றி வழங்கவேண்டும்.
உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டன. இப்போராட்டத்தின்போது, செய்தியாளர்களிடம் பேரவை உறுப்பினர் அசனா கூறியது:
புதுச்சேரி அரசு, மாதந்தோறும் வழங்கிவந்த இலவச அரிசியை முறையாக தரவில்லை. அண்மையில் பேருந்து கட்டணத்தை கடுமையாக உயர்த்திவிட்டது.
இதனால், பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளுக்காக கடந்த 2015-ஆண்டு முதல் விண்ணப்பித்தோருக்கு இதுவரை அரசு வழங்கவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகளும் முறையாக கிடைக்கவில்லை.
மாணவர்களுக்கான ரூ.1 கட்டணப் பேருந்து முறையாக இயக்கப்படவில்லை. இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களை தடையின்றி செயல்படுத்தாவிட்டால், விரைவில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட அவைத் தலைவர் எஸ்.பி. கருப்பையா, பொருளாளர் எச்.எம்.ஏ. காதர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் ரவி உள்ளிட்ட 75 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.