காரைக்காலில் நாட்டியாலயா பரதநாட்டியக் குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் நாட்டியாலயா பரதநாட்டிய அகாதெமி குழுவின் சித்ரா கோபிநாத் மாணவியர் பங்கேற்ற 15-ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் சுமார் 80 மாணவியர் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கணபதி ஸ்துதி, பஞ்சகலைப்பாடல், கண்ணன், ராமன், ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்களைப் போற்றி கீர்த்தனைகள் மற்றும் காமாட்சி விருத்தம், வராக அவதாரம், சிலப்பதிகாரம், நாட்டிய நாடகம், பசுமைப்புரட்சி நடனம், பாரதியார் பாடலுக்கான நடனம், பாங்ரா நடனம், தமிழ் மாத வருடங்களுக்கான நடனம், மயில் நடனம், தில்லானா நடனம் ஆகியவை இடம்பெற்றன.
முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச். நாஜிம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஏ. ராஜசேகரன், ஸ்ரீ பகவான் பக்தஜன சபா தலைவர் அமுதா ஆர். ஆறுமுகம், செயலர் பாரீஸ்ரவி, பொருளர் முத்துசாமி, பேராசிரியர் சாயபுமரைக்காயர், பேராசிரியை நசீமாபானு, கலைஞர்கள் மாமன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியை செல்லூர் மணியன், சித்ராகோபிநாத் ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை நாட்டியாலயாவைச் சேர்ந்த கோபிநாத் செய்திருந்தார்.