புதிய பள்ளிக் கட்டடம் கட்டக் கோரி குறைதீர் கூட்டத்தில் மனு
நெடுங்காட்டில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும் என திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் பெற்றோர் கோரிக்கை மனு அளித்தனர்.
நெடுங்காட்டில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும் என திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் பெற்றோர் கோரிக்கை மனு அளித்தனர்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஆர். கேசவன் தலைமையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், புதுவைக் குரல் இணையதளத்தில் வந்த புகார், புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு நேரடியாக அளித்த புகார், அரசு இணைய தளத்துக்கு வந்த புகார் குறித்து ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டு, மனு மீது 30 நாள்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையடுத்து, பொதுமக்கள் இலவச மனைப்பட்டா, வீடுகட்ட அரசு மானிய நிதியுதவி, தங்களுக்கு வீட்டு மனைக்குரிய ஆவணம் வழங்கப்பட்டிருப்பதாகவும், மனைக்கான நிலத்தை காண்பிக்கவில்லை, காரைக்காலில் எரிவாயு உருளை விநியோகிக்கும் நிறுவனத்தினர் குடியிருப்புப் பகுதிகளுக்கு முறையாக விநியோகிப்பதில்லை, எரிவாயு உருளை விநியோகத்துக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாகவும் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காரைக்கால் பகுதியில் பிஆர்டிசி சிற்றுந்துகள் தடையின்றி கிராமப்புறங்களுக்கு இயக்க வேண்டும், தொலை தூரங்களுக்குச் செல்லும் வகையில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும், காரைக்கால் பகுதியில் சீர்கெட்டிருக்கும் தேசிய, நகரச் சாலைகளை புதுப்பிக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
தவிர, நெடுங்காடு அரசு தொடக்கப்பள்ளிக் கட்டடத்தை முழுவதும் இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டிக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் மனு அளித்தனர்.
கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் எம் .தினேஷ், சார்பு ஆட்சியர் ஏ. விக்ராந்த் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.