பேருந்தில் சென்ற இரு பெண்களிடம் ரூ.90 ஆயிரம் திருடிய பெண் கைது
பேருந்தில் சென்ற இரண்டு பெண்களிடம் ரூ.90 ஆயிரம் ரொக்கத்தை திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
பேருந்தில் சென்ற இரண்டு பெண்களிடம் ரூ.90 ஆயிரம் ரொக்கத்தை திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகே சுரக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ராஜகாந்த். இவரது மனைவி கங்கை. இவர் காரைக்காலில் உள்ள ஒரு வங்கியில் தமது கணக்கிலிருந்து ரூ.85 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு, தமிழக அரசுப் பேருந்தில் திருநள்ளாறு பகுதியில் சுரக்குடிக்கு சென்றுள்ளார். இதேபோல, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணுசாமி மனைவி சாந்தி என்பவர் ரூ.4,700 பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இவ்விருவரும் சுரக்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கும்போது பொருள்கள் வைத்திருந்த பெரிய பையில் வைத்திருந்த பேக்குகள் காணாமல் போய் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், அதில் பணம் இருந்ததாகக் கூறி கூச்சலிட்டதால் பேருந்து நிறுத்தப்பட்டது. பின்னர், பேருந்தில் உள்ளவர்களிடம் நடத்துநர் விசாரித்தபோது, ஒரு பெண் மட்டும் பேருந்திலிருந்து இறங்க முயற்சித்துள்ளார்.
சந்தேகத்தின்பேரில் இவரை நிறுத்தி விசாரித்தபோது, இருவரது பேக்கையும் திருடியதை ஒப்புக்கொண்டார். தகவலின்பேரில், திருநள்ளாறு காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, பெண்ணிடம் விசாரணை செய்தனர். மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி கனகா (26) என அவர் தெரிவித்துள்ளார். இவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து ரூ.89,700 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இவரிடம் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.