காரைக்காலில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ள மலர், காய்கனி கண்காட்சியில் வைப்பதற்காக, பெங்களூரு, ஓசூரிலிருந்து மலர் செடிகள், மரக்கன்றுகள் உள்ளிட்டவை புதன்கிழமை கொண்டுவரப்பட்டன.
வருகிற 16, 17, 18 ஆகிய தேதிகளில் காரைக்கால் புதிய நகராட்சி திடலில் (சந்தைத் திடல்) கண்காட்சிக்கான அரங்கு அமைப்புப் பணிகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு தொடங்கின. அரங்கில் காட்சிக்கு வைக்கப்படுவதற்காக பெங்களூரு, ஓசூரிலிருந்து மலர் செடிகள், மரக்கன்றுகள் லாரிகளில் புதன்கிழமை கொண்டுவரப்பட்டன. வேளாண் அலுவலர்கள் முன்னிலையில் இவை அரங்கில் அடுக்கிவைப்பதற்கான பணிகள் தொடங்கின.
வேளாண் துறை அலுவலர்கள் தரப்பில் கூறும்போது, மலர் செடிகள், மரக்கன்றுகள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செடிகள் கண்காட்சியில் வைக்கப்படவுள்ளன.
மாடித்தோட்டம் அமைப்பது தொடர்பான விளக்கம் கண்காட்சியில் அளிக்கப்படும். மருந்தில்லா நெல் சாகுபடி முறை குறித்து காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் அரங்கு அமைத்து விளக்கம் தரப்படும். நிலையத்தின் பிற செயல்பாடுகள் குறித்து எல்.சி.டி. திரையின் மூலம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. மேலும் தண்ணீர் குறைவாகப் பயன்படுத்தி வீட்டில் காய்கறித் தோட்டத்தை அமைப்பது எவ்வாறு என்பது குறித்து மாதிரி உருவாக்கப்பட்டு விளக்கம் தரப்படும். உபயோகமில்லா பழைய பொருள்களைக் கொண்டு தோட்டம் அமைக்கும் முறை குறித்து காட்சிப்படுத்தப்படும்.
நிகழாண்டு சிறுதானிய ஆண்டு என்பதால், பல வகையான சிறுதானியத்தில் தயாரித்த உணவுகள் காட்சிப்படுத்தப்படும். கண்காட்சி நிறைவின்போது செடிகளை மானிய விலையில் மக்கள் வாங்கிச் செல்லலாம். இந்தக் கண்காட்சியை காரைக்கால் பகுதியினர் பயன்படுத்திக்கொண்டு, தோட்ட சாகுபடியை ஆர்வமாகச் செய்ய முன்வரவேண்டும் என்றனர்.