திருநள்ளாறில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி
திருநள்ளாறில் புதன்கிழமை நள்ளிரவு வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.
திருநள்ளாறில் புதன்கிழமை நள்ளிரவு வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.
திருநள்ளாறு மேலவீதியில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் உள்ளது. புதன்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் ஏடிஎம் பகுதிக்கு சென்று, இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளதாக வங்கி மேலாளர் அனிதா திருநள்ளாறு காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார். இதுகுறித்து, காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் பிரவீன்குமார் உள்ளிட்ட போலீஸார் ஏடிஎம் மையத்துக்குச் சென்று அங்கு உள்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை பதிவிறக்கம் செய்து பார்த்தனர்.
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கும் முயற்சியில் மூவர் செல்வதும், ஒருவர் நுழைவுவாயிலில் நின்று கொண்டு 2 பேர் மட்டும் உள்ளே செல்வதும், இரும்பு கம்பியால் இயந்திரத்தின் முன்புறக் கதவை உடைத்துவிட்டு, ரொக்கம் உள்ள பெட்டியை திறக்க முயற்சித்தபோது அலார சப்தம் ஒலிக்கத் தொடங்கியதும் மூவரும் தப்பியோடிவிட்டது தெரியவந்தது.
இச்சம்பவம் இரவு 12 முதல் 1.30 மணிக்குள்ளாக நடந்துள்ளது கேமரா பதிவின் மூலம் தெரியவந்தது. இச்சம்பவத்தில் இயந்திரத்தின் முன்புறம் மட்டும் சேதமடைந்திருந்தது. இயந்திரத்தில் இருந்த ரொக்கம் பத்திரமாக இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் இக்கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டோர் குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளதோடு, பல்வேறு பகுதி காவல்நிலையங்களுக்கும் அனுப்பி இவர்களது விவரத்தை சேகரிக்க நடவடிக்கை எடுத்துள்ள்ளனர்.
கொள்ளை முயற்சியில் ஈடுபட்டோரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.