திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காரைக்காலில் நாஜிம் உள்ளிட்ட திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கைது செய்த போலீஸார் பின்னர் விடுவித்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தம்மை சந்திக்க மறுப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் அறை முன் தர்னா மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து காரைக்கால் மாவட்ட திமுக சார்பில் சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் தலைமையில் திமுகவினர், மாதா கோயில் வீதியில் உள்ள திமுக அலுவலகத்திலிருந்து திருநள்ளாறு சாலை - பாரதியார் சாலை சந்திப்பு வரை ஊர்வலகமாகச் சென்றனர்.
இந்தச் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் திமுகவினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் மற்றும் தமுமுகவைச் சேர்ந்த சிலரும் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாஜிம் மற்றும் காங்கிரஸ், தமுமுகவினர் உள்ளிட்ட 80 பேரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்த மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.