முகப்பு
காரைக்கால்

மாணவியருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கல்வி மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:25 AM
பகிர்:

மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கல்வி மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் பகுதி தருமபுரம் எஸ்.ஆர்.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கருத்தரங்கில்  பள்ளி முதல்வர் கந்தசாமி தலைமை வகித்தார். புதுச்சேரி அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மையத்தின் தலைமை அலுவலர் பிரமிளா தமிழ்வாணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவியரிடையே பேசினார்.
மாணவியர் பள்ளியிலும், பிற இடங்களிலும் நடந்துகொள்ளவேண்டிய ஒழுங்கு முறைகள் குறித்தும், உடல் ரீதியாக தம்மை யாரும் சீண்டும் வகையில் அனுமதிக்கக்கூடாது எனவும், சமுதாயத்தில் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும்பட்சத்தில் மேற்கொண்டு செய்யவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், பெற்றோர்களிடம் மாணவியர் தெரிவிக்க வேண்டியவை குறித்தும் விளக்கமாகப் பேசினார்.
மேலும், மாணவிகள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு அவர் விளக்கமளித்தார். கல்வி, விளையாட்டு, பரந்த அறிவை வளர்த்துக்கொள்ள எடுக்கவேண்டிய முயற்சிகள், பெற்றோர்களின் ஆலோசனைப்படி நடத்தல், நல்ல நண்பர்கள் சேர்க்கையில் சிறப்பு கவனம் செலுத்துதல் போன்றவை குறித்தும் அவர் அறிவுறுத்தினார். அத்துடன், இளம் வயதில் ஏற்படும் மனப்போராட்டங்கள் குறித்தும், மனதை நிலைப்படுத்தப் பழக்கிக்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் விளக்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை சாஜிதா வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் தே.சுமதி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.