தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது, வேளாண் கல்லூரியில் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சலுகைகள் தரப்பட்டதாகப் புகார் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்க காரைக்கால் பிரிவுத் தலைவர் எஸ்.ஆனந்தகுமார் வெளியிட்ட அறிக்கை:
காரைக்கால் பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கடை நிலை ஊழியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின் பதவி மற்றும் ஊதிய உயர்வுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகளும் இவ்வாறு தரப்பட்டன. கல்லூரிக்கான புதிய முதல்வர் நியமனத்துக்கான புதிய அறிவிப்பாணையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த நடவடிக்கைகள் யாவும் ஆளும் கட்சிக்கு சாதகமான நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது.
இதேபோல், விவசாயிகளுக்குப் பயிற்சி என கூறிக்கொண்டு 200 பேருக்கு மதிய உணவு தரப்பட்டது. இதுவும் ஆளும் கட்சிக்கு செல்வாக்கு உயர செய்த நடவடிக்கையாகும். இந்த கல்லூரி அமைச்சர் தொகுதியில் உள்ளதால், அரசியல் லாபத்துக்காக குறுக்கீடுகள் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை.
வேளாண் கல்லூரியை ஓட்டு வங்கி மையமாக மாற்றிய கல்லூரி முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும். இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தவறான அறிக்கை தயார் செய்து நன்னடத்தை விதி மீறல்களை மறைத்தும், மறுத்தும் வருகிறார். இதனால் தேர்தல் ஆணையத்தின் பார்வையாளரிடம் புகார் தரப்பட்டது.
மாவட்டத் தேர்தல் அதிகாரியும், நன்னடத்தை விதிகள் கண்காணிப்பு அதிகாரியும் மேலிடப் பார்வையாளரை தவறாக வழிநடத்துகின்றனர். எனவே, இந்த அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.