மகாளய அமாவாசையையொட்டி காரைக்கால் கடற்கரையில் பித்ரு வழிபாடாக திதி கொடுக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஏரளமானோர் கலந்துகொண்டு தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
உயிர்நீத்த முன்னோர்களுக்கு அவரவர் இறந்த திதியில் தர்ப்பணம் உள்ளிட்ட திதி கொடுக்கும் வழிபாடு இந்து மதத்தில் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக மாசி மகம், தை அமாவாசை, ஆடி அமாவாசையிலும், மகாளய அமாவாசையிலும் சமுத்திரத்தில் நீராடி திதி வழங்கலில் ஏராளமானோர் ஈடுபடுகின்றனர். தென்புலத்தார் என்கிற முன்னோர்களை மகிழ்விக்கும் புண்ணிய செயலாக திதி கொடுப்பதில் ஈடுபடுகின்றனர்.
பூஜ்ய ஸ்ரீ ஓங்காரநந்தா மகா சுவாமிகள் தலைமையில் இயங்கும் தர்மரக்ஷ்ண சமிதி சார்பில் மகாளய அமாவாசை தினமான சனிக்கிழமை, காரைக்கால் கடற்கரையில் பித்ருகளுக்கு புண்ணிய கிரியை (திதி கொடுத்தல்) நிகழ்ச்சி காலை 7 முதல் பகல் 12 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக முன் பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சமிதி சார்பில் சிவாச்சாரியார்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். காலை முதல் காரைக்கால் கடற்கரை மணல் பரப்பில் திதி கொடுக்கும் வழிபாடு நடைபெற்றது.
இதுகுறித்து, சமிதியின் நிர்வாகத்தினர் கூறியது:
கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் முறையாக காரைக்கால் கடற்கரையில் பொதுமக்கள் பங்கேற்று திதி கொடுப்பதற்கான பொது ஏற்பாட்டை செய்திருந்தோம். நிகழாண்டு 2-ஆம் ஆண்டாக செய்யப்பட்டது. மகாளய அமாவாசை தர்ப்பண காரியத்தில் பங்கேற்போர், திதி கொடுக்க பயன்படுத்தும் பொருள்களை கொண்டு வந்திருந்தனர். கடற்கரையில் பல்வேறு பிரிவாக நடத்தப்பட்டதில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என்றனர்.