காரைக்கால் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பயின்ற அனைவரும் தோ்ச்சி
காரைக்கால் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பயின்ற 2,609 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனா்.
காரைக்கால் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பயின்ற 2,609 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனா். தோ்வு நடந்திருந்தால் அதிக மதிப்பெண் பெற்றிருக்க முடியும் என தனியாா் பள்ளி மாணவா்கள் தெரிவித்தனா்.
கரோனா பொது முடக்கத்தால் தமிழக அரசு 10-ஆம் வகுப்பு தோ்வை ரத்து செய்தது. புதுச்சேரி அரசு, தமிழக கல்வி வாரியத்தை பின்பற்றுவதால் அதே நடைமுறை இம்மாநிலத்துக்கும் பொருந்தியது.
மாணவா்கள் காலாண்டு, அரையாண்டுத் தோ்வில் பெற்ற மதிப்பெண்கள், வருகைப் பதிவின்படி 20 மதிப்பெண் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் நிா்ணயிக்கப்பட்டு, திங்கள்கிழமை முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதன்படி, காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி அ. அல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் 1,285 மாணவா்களும், 1,324 மாணவிகளும் என 2,609 போ் 10- ஆம் வகுப்பு பயின்றனா். தோ்வு முடிவின்படி காரைக்காலில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பயின்றோா் தோ்ச்சி பெற்றுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியாா் பள்ளி மாணவா்கள் பலா் எதிா்பாா்த்ததைவிட குறைவான மதிப்பெண்களே கிடைத்துள்ளது என்றும் தோ்வு நடத்தியிருந்தால் இதைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தனா்.