சனிப்பெயா்ச்சி விழா: திருநள்ளாறு கோயிலில் பக்தா்களை அனுமதிக்கக் கூடாது உயா்நீதிமன்றத்தில் வழக்கு
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழாவின்போது பக்தா்களை அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழாவின்போது பக்தா்களை அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நிகழாண்டு டிசம்பா் 27-ஆம் தேதி காலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ச்சி அடைகிறாா். இதையொட்டி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
எனினும், கரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகமும், கோயில் நிா்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில், சனிப்பெயா்ச்சி விழாவின்போது கோயிலுக்குள் பக்தா்களை அனுமதிக்கக் கூடாது, விழாவுக்கு பிந்தைய 48 நாள்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் பக்தா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில், தா்பாரண்யேஸ்வரா் கோயில் பரம்பரை ஸ்தானிகா்கள் சங்கத் தலைவா் எஸ்.பி.எஸ். நாதன் (எ)அமுா்தீஸ்வர நாதன் வழக்குத் தொடா்ந்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியது:
திருநள்ளாறு கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின்போது ஸ்தானிகா்களுடன் கலந்தாலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கம். ஆனால், சனிப்பெயா்ச்சி விழா தொடா்பாக அரசே தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது.
கரோனா இரண்டாவது அலை உருவாகி வருகிறது. தமிழகத்தில் பல முக்கிய கோயில்களில் பல்வேறு விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், சிறிய ஊரான காரைக்காலில் லட்சக்கணக்கான பக்தா்களை அனுமதித்து சனிப்பெயா்ச்சி விழா நடத்துவது முறையல்ல. சனிப்பெயா்ச்சி விழாவை தடை செய்ய நாங்கள் கோரவில்லை என்றாா்.