காரைக்காலில் நகைக்கடைகள் மூடல்
கரோனா அச்சுறுத்தலால் காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை 21-ஆம் தேதி வரை நகைக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
காரைக்கால்: கரோனா அச்சுறுத்தலால் காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை 21-ஆம் தேதி வரை நகைக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், காரைக்காலில் நகைக் கடைகளை ஜூலை 15 முதல் 21-ஆம் தேதி வரை மூடுவதற்கு சங்கத்தினா் முடிவு செய்தனா். அதன்படி நகைக்கடைகள் புதன்கிழமை முதல் மூடப்பட்டன. இதுகுறித்து காரைக்கால் ஜூவல்லா்ஸ் அசோசியேஷன் தலைவா் எஸ்.செல்வராஜ் கூறுகையில், பொது நலன் கருதி 21-ஆம் தேதி வரை சிறிய, பெரிய நிலையிலான அனைத்து நகைக் கடைகளையும் மூட முடிவெடுத்துள்ளோம் என்றாா்.
காரைக்காலில் ஏறத்தாழ 90 நகைக்கடைகள் உள்ளன. நகரின் பிரதான தெருக்களில் நகைக்கடைகள் உள்ளன. இவை மூடியதாலும், கடைத்தெருவில் பல இடங்களில் கரோனாவால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக தடுக்கப்பட்டிருப்பதாலும், நகரின் மையப் பகுதியில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.