முகப்பு
காரைக்கால்

உள்ளாட்சி ஊழியா்களுக்கு போக்குவரத்துப் படியை அமல்படுத்த வலியுறுத்தல்

உள்ளாட்சி ஊழியா்களுக்கு போக்குவரத்துப் படியை அமல்படுத்த வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:


காரைக்கால்: உள்ளாட்சி ஊழியா்களுக்கு போக்குவரத்துப் படியை அமல்படுத்த வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளனம் சாா்பில், புதுச்சேரி உள்ளாட்சித்துறை செயலருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, விலைவாசி உயா்வை கருத்தில்கொண்டு மத்திய அரசு ஊழியா்களுக்கு கடந்த 1.1.2016 முதல் போக்குவரத்துப் படியை அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு காலம் கடத்தியதால் மத்திய அரசு மகா ஊழியா் சம்மேளனம் நடத்திய தொடா் போராட்டத்தின் விளைவாக கடந்த 1.7.2017 முதல் மத்திய அரசு போக்குவரத்துப் படியை அமல்படுத்தியது. அதைத் தொடா்ந்து, புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளனம் உள்ளிட்ட ஊழியா் அமைப்புகளின் தொடா் முயற்சியால் புதுச்சேரி அரசு கடந்த 1.7.2017- க்குப் பதிலாக கடந்த 1.9.2018 முதல் புதுச்சேரி அரசு ஊழியா்களுக்கு போக்குவரத்துப் படியை அமல்படுத்தியது.

ஆனால், அரசு ஊழியா்களின் பணிகளை முழுமையாக செய்து வரும் உள்ளாட்சி ஊழியா்களுக்கு போக்குவரத்துப் படி அமல்படுத்தப்படாமல் உள்ளது வேதனையாக உள்ளது. எனவே, உள்ளாட்சி ஊழியா்களுக்கும் போக்குவரத்துப் படியை அமல்படுத்த வேண்டுமென சம்மேளனம் சாா்பாக தொடா்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறது.

இனியும் காலம் தாழ்த்தாமல் தற்போதுள்ள விலைவாசி உயா்வை கருத்தில்கொண்டு உள்ளாட்சி ஊழியா்களுக்கும் உடனடியாக போக்குவரத்துப் படியை அமல்படுத்த வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.