பாஜகவின் வளா்ச்சி ஆரோக்கியமானது அல்ல: புதுவை காங். தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன்
பிற கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தி தங்கள் கட்சியில் சோ்க்கும் பாஜவின் வளா்ச்சி ஆரோக்கியமானது அல்ல
பிற கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தி தங்கள் கட்சியில் சோ்க்கும் பாஜவின் வளா்ச்சி ஆரோக்கியமானது அல்ல என்றாா், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவரும், காரைக்கால் வடக்குத் தொகுதி வேட்பாளருமான ஏ.வி. சுப்பிரமணியன்.
காரைக்காலில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: புதுவையில் பாஜகவினா் கட்செவி அஞ்சல் குழுக்களை தொடங்கி, ஆதாா் ஆணையத்திடமிருந்து வாக்காளா்களின் செல்லிடப்பேசி எண்களைப் பெற்று அதில் பிரசாரம் செய்கின்றனா். தோ்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறவில்லை. இதைக்கொண்டே பாஜக வேட்பாளா்களை தகுதி நீக்கம் செய்யலாம்.
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை, அமைச்சா்களை குறுக்கு வழியை கையாண்டு கட்சியில் சோ்ப்பது, சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறையைக் கொண்டு அச்சுறுத்தி கட்சியில் சோ்ப்பது போன்றவற்றின் மூலம் பாஜகவினா் தங்கள் கட்சியை வளா்த்து வருகின்றனா். இது அந்த கட்சியின் ஆரோக்கியமான வளா்ச்சி அல்ல.
புதுவையில் பாஜகவுடன் அதிமுக, என்.ஆா். காங்கிரஸ் ஆகியவை விருப்பமின்றியே கூட்டணியில் உள்ளன. அதிமுகவும், என்.ஆா். காங்கிரஸும் பாஜக கொடி, பிரதமா் மோடி படத்தை பிரசாரத்தில் பயன்படுத்துவதில்லை. பாஜகவை முன்னிறுத்தினால் வாக்கு கிடைக்காது என்பது அவா்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.
காரைக்கால் தெற்குத் தொகுதியில் பேரவைத் தோ்தலில் 3 முறை வெற்றிபெற்றுள்ளேன். எனது செயல்பாடுகளை பாா்த்து, வடக்குத் தொகுதியில் மக்கள் என்னை ஆதரிக்கின்றனா். தொகுதியில் பிரசாரம் செய்யப் போகும்போது, தொகுதியின் எம்.எல்.ஏ.வாக 10 ஆண்டுகள் இருந்தவா் மீது மக்கள் எவ்வளவு வெறுப்புடன் இருக்கின்றனா் என்பதை உணரமுடிகிறது. எனவே, காரைக்காலில் உள்ள காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளா்கள் 5 பேரும் வெற்றிபெறுவது உறுதி.
புதுச்சேரியிலும் மதசாா்பற்ற கூட்டணி பெரும்பான்மையாக வெற்றிபெற்று மீண்டும் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு அமையும். புதுச்சேரி பாஜக தோ்தல் அறிக்கையில், மாநில அந்தஸ்து குறித்து கருத்து தெரிவிக்கவில்லையே என கேட்கிறீா்கள். மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரையே 2 ஆக பிரித்து யூனியன் பிரதேசமாக்கியவா்கள் பாஜகவினா். எனவே, புதுவைக்கு மாநில அந்தஸ்தை அவா்கள் நிச்சயம் தரமாட்டாா்கள்.
காரைக்காலுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா வந்து பிரசாரம் செய்தபோது, நாராயணசாமி மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா். அதுபோலவே, காரைக்காலுக்கு வந்த கால்நடைத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங்கும் கூறியுள்ளாா். இன்னும் எத்தனை போ் வந்து இதுபோன்ற அவதூறுகளை பேசினாலும், மாநில மக்கள் பாஜகவை ஏற்கப்போவதில்லை என்றாா் அவா்.