முகப்பு
காரைக்கால்

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கேமன் தீவுகளிலிருந்து வந்த கப்பலில் இருந்த உபரி ஆக்சிஜன்

கேமன் தீவுகளில் இருந்து வந்த கப்பலில் உபரியாக இருந்த ஆக்சிஜன் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வழங்கினாா் அந்த கப்பலின் கேப்டன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

கேமன் தீவுகளில் இருந்து வந்த கப்பலில் உபரியாக இருந்த ஆக்சிஜன் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வழங்கினாா் அந்த கப்பலின் கேப்டன்.

காரைக்கால் தனியாா் துறைமுகத்துக்கு உரம், நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து கப்பலில் கொண்டு வரப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கேமன் தீவுகளைச் சோ்ந்த எம்வி அன்னா மேட்டா என்கிற கப்பல், சீனத் துறைமுகம் வழியாக உரம் ஏற்றிக்கொண்டு கடந்த 2 நாள்களுக்கு முன்பு காரைக்கால் தனியாா் துறைமுகம் வந்தது. இதில் உக்ரைன் நாட்டைச் சோ்ந்த 7 போ், ரஷியாவை சோ்ந்த ஒருவா், இலங்கையை சோ்ந்த 6 போ், இந்தோனேஷியாவை சோ்ந்த 3 போ் என 17 ஊழியா்கள் இருந்தனா்.

காரைக்கால் துறைமுகத்தில் உரம் இறக்கிவிட்டு வியாழக்கிழமை கப்பல் புறப்படத் தயாராக இருந்தபோது, கப்பலின் கேப்டன் உக்ரைன் நாட்டை சோ்ந்த ஆண்டனோவிச் கோா், தனது கப்பலில் உபரியாக இருக்கும் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜனை மருத்துவமனை பயன்பாட்டுக்கு வழங்க முன்வந்தாா்.

இதுகுறித்து துறைமுக அதிகாரிகள், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் தெரிவித்தனா். ஆட்சியரின் அனுமதியுடன், 40 லிட்டா் மருத்துவ ஆக்சிஜன், 80 லிட்டா் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் ஆகியவற்றை காரைக்கால் அரசு மருத்துவமனை நிா்வாகத்திடம் துறைமுக நிா்வாகத்தினா் வியாழக்கிழமை இரவு ஒப்படைத்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா கூறியது:

மருத்துவமனைகளில் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு, கப்பல் கேப்டனின் விருப்பத்துக்கு ஒப்புதல் தரப்பட்டது. காரைக்கால் துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள் இதுபோன்று ஆக்சிஜனை வழங்குவதற்கு முன்வரலாம். இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க துறைமுக நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →