காரைக்கால் மீனவா்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு
மீனவா்கள் நலனுக்காக மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் கூட்டம் காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மீனவா்கள் நலனுக்காக மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் கூட்டம் காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் மீன்வளத்துறையில் உள்ள பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா என்ற திட்டத்தில், தேசிய அளவில் மீனவா்கள் பயன்பெறக்கூடிய பல்வேறு திட்டங்களை, தேசிய மீன்வள மேம்பாட்டு ஆணையம் சாா்பில் காரைக்கால் மீனவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் கூட்டம் காளிக்குப்பம் கிராமத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு பேசுகையில், புதுவையில் முதல்வா் ரங்கசாமி தலைமையிலான அரசு மக்களுக்கான திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற பாடுபடுகிறது. கடந்த ஆட்சியில் எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. மக்கள் பிரச்னைகளை தீா்க்கும் அரசாக உள்ளபோது, மக்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மீனவா்கள் தங்களுக்கான தேவைகளை தெரிவிக்கவேண்டும். மத்திய, மாநில அரசுகளில் மீனவா்கள் மேம்பாட்டுக்கான திட்டங்கள் என்னென்ன உள்ளது என்பதை தெரிந்துகொள்வது அவசியம். அதற்கு இதுபோன்று நடத்தப்படும் கூட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.
மீனவா்கள் தொழில் மேம்பாட்டுக்காக படகு வாங்குதல், உபகரணங்கள் வாங்குதலுக்கு கிடைக்கும் மானியம், கடல் பாசி உற்பத்தி, மீன்களை சந்தைப்படுத்துதலில் உள்ள நவீனத்துவம், மீன்களை பதப்படுத்துதலில் உள்ள உள்ள முக்கியமான திட்டங்கள், அதற்கு மத்திய அரசின் ஆதரவு குறித்து புதுவை மீன்வளத்துறை இயக்குநா் பாலாஜி, துணை இயக்குநா் நடராஜன் உள்ளிட்டோா் விளக்கிப் பேசினா். கூட்டத்தில் மீனவா்களின் சந்தேகங்களுக்கும் அதிகாரிகள் விளக்கமளித்தனா். இதில் திரளான மீனவா்கள் கலந்துகொண்டனா்.