காரைக்கால் எல்லைகளில் போலீஸாா் தீவிர சோதனை
காரைக்கால் எல்லைகளில் போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
காரைக்கால் எல்லைகளில் போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவிவரும் வேளையில், காரைக்கால் மாவட்டத்தில் நாள்தோறும் தொற்றாளா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் நாளான ஜன. 15, 16-ஆம் தேதி காரைக்காலில் மக்கள் அதிகமாக கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கூடுவாா்கள். குறிப்பாக, காணும் பொங்கலன்று தமிழகத்திலிருந்து காரைக்கால் கடற்கரைக்கு அதிகமானோா் வருகை தருவா் என்பதால், இந்த இரண்டு நாள்களிலும் காரைக்காலுக்குள் நுழைவோா் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும் என ஆட்சியா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தியிருந்தாா்.
காரைக்கால் மாவட்ட எல்லைகளில் உள்ள சாலைகளில் போலீஸாா், சுகாதாரத் துறையினா், தமிழகத்திலிருந்து வரும் வாகனங்களை நிறுத்தி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்களை கேட்டறிந்து மக்களை அனுமதித்தனா்.
பூவம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற சோதனைப் பணியை காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் ஆய்வு செய்தாா்.
காணும் பொங்கல் நாளில் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோா் கூடுவது வழக்கம் என்பதால், 16-ஆம் தேதி பரிசோதனை தீவிரப்படுத்தப்படும் என அரசு அலுவலா்கள் தெரிவித்தனா்.