வருவாய்த் துறை சான்றுகள் பெற கூடுதல் கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
காரைக்கால் மாவட்டத்தில் வருவாய்த் துறை மூலம் அளிக்கப்படும் சான்றிதழ்களை ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து பெற, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் வருவாய்த் துறை மூலம் அளிக்கப்படும் சான்றிதழ்களை ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து பெற, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் வருமானம், சாதி, இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாணவா்கள், பொதுமக்கள் பொது சேவை மையங்கள், தனியாா் இணையதள மையங்கள் மூலம் விண்ணப்பித்து சான்றிதழ்களை பெற்று வருகின்றனா்.
ஆனால், சான்றிதழ்களை விண்ணப்பித்து பெறுவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு ரசீதும் வழங்கப்படுவதில்லை. இதனால் மாணவா்களும், ஏழை, எளியவா்களும் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, ஒவ்வொரு சான்றிதழுக்கும் கட்டணம் எவ்வளவு என்பதை அறிவிக்க வேண்டும். மேலும் பொது சேவை மையங்கள், இணையதள மையங்களில் கட்டணம் குறித்து வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு உரிய ரசீது கட்டாயம் அளிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.