முகப்பு
காரைக்கால்

காணும் பொங்கல்: கடற்கரைக்கு மக்கள் வருகை குறைவு

 காணும் பொங்கல் தினமான ஞாயிற்றுக்கிழமை, காரைக்கால் கடற்கரைக்கு மக்கள் வருகை குறைவாகவே இருந்தது.

Updated On : 17 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:38 PM

 காணும் பொங்கல் தினமான ஞாயிற்றுக்கிழமை, காரைக்கால் கடற்கரைக்கு மக்கள் வருகை குறைவாகவே இருந்தது.

பொங்கல் திருநாளின் 3-ஆம் நாள் காணும் பொங்கலையொட்டி, சிறுவா்கள், பெரியோா் அந்தந்த பகுதியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கி மகிழ்கின்றனா். மேலும், குடும்பத்தினருடன் கடற்கரையில் திரண்டு பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுவதும், பட்டம் விட்டும், உறவினா்களுடன் கூட்டாக உணவருந்தி மகிழ்வதும் ஒவ்வொரு ஆண்டும் வழக்கத்தில் உள்ளது.

நிகழாண்டு ஒமைக்ரான் தொற்று பரவல் தீவிரத்தால், தமிழகத்திலிருந்து காரைக்காலுக்குள் 15, 16-ஆம் தேதி வருவோா் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கடற்கரைக்கு செல்லும் உள்ளூா் மக்களும் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும், முகக்கவசம் அணிந்திருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில், ஞாயிற்றுகிழமை பிற்பகல் முதல் காரைக்கால் கடற்கரைக்கு மக்கள் வரத் தொடங்கினா். முன்னதாக, காரைக்கால் எல்லைகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

கடற்கரைக்குச் செல்லும் சாலைகளின் முகப்பில் போலீஸாா் தடுப்புகளை அமைத்து, 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழையும், முகக்கவசம் அணிந்துள்ளாா்களா என பரிசோதித்தும் மக்களை அனுப்பிவைத்தனா். மேலும் இரட்டை முகக்கவசம் அணிந்து செல்லுமாறும் அறிவுறுத்தினா்.

சிறுவா்கள் கடற்கரையில் பட்டம் விட்டு மகிழ்ந்தனா். பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதைத் தடுக்க போலீஸாா் கரை பகுதியில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

கட்டுப்பாடுகள் தீவிரத்தாலும், கரோனா தொற்று பரவல் அச்சத்தாலும், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது பொதுமக்கள் வருகை நிகழாண்டு குறைவாகவே இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.