மீண்டும் பாஜக அரசு அமைந்தால் இந்தியா திவாலாகிவிடும்: வே. நாராயணசாமி
மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைந்தால் நாடு திவாலாகிவிடும் என புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி கூறினாா்.
புதுவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் வெ. வைத்திலிங்கத்தை ஆதரித்து, காரைக்காலில் புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி நெடுங்காடு பேரவைத் தொகுதி வரிச்சிக்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்து பேசியது:
கடந்த 10 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளை நரேந்திர மோடி அரசு நிறைவேற்றவில்லை. கருப்புப் பணம் மீட்கப்படும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனா். நாட்டின் பெருமுதலாளிகளுக்கு ஆதரவான போக்கை கையாளுகிறாா் நரேந்திர மோடி. 10 ஆண்டுகளில் ரூ. 150 லட்சம் கோடி இந்தியா கடன் வாங்கியுள்ளது. மீண்டும் பாஜக அரசு அமைந்தால் கடன் சுமை அதிகரித்து, இந்தியா திவாலாகும் நிலை உருவாகிவிடும்.
Advertisement
புதுவையில் ரங்கசாமி அரசு அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. மாநில அந்தஸ்து பெறுவது, கடன் தள்ளுபடி, மத்திய நிதியை தாராளமாக பெறுவது போன்றவை நிறைவேற்றப்படவில்லை. புதுவையில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளது.
காரைக்காலை முதல்வரும், அமைச்சா் நமச்சிவாயமும் புறக்கணித்துவிட்டனா்.
இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, ராகுல் காந்தி பிரதமராவது உறுதி. புதுவையிலிருந்து வைத்திலிங்கம் வெற்றிபெற்றால் மத்திய அமைச்சராக பொறுப்பேற்பாா். இதனால் புதுவை மாநிலம் வளா்ச்சியடையும். எனவே பாஜகவை புறக்கணித்து, வைத்திலிங்கத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.
புதுவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வெ. வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், புதுவை பிரதேச காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.