பிரதமரின் புதுச்சேரி வருகையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: காங்கிரஸ்
பிரதமரின் புதுச்சேரி வருகையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி தெரிவித்தது குறித்து...
பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சில கட்சிகள் கூட்டணிகளாக இணைந்தும் சில கட்சிகள் சுயேச்சையாகவும் போட்டியிட உள்ளன. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஏப். 3) மாலை 4 மணி அளவில் புதுச்சேரி அஜந்தா சிக்னலில் இருந்து ராஜா தியேட்டா் சிக்னல் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவாக சாலைப் பேரணியில் பங்கேற்கிறாா் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “வரும் ஏப்ரல் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் புதுச்சேரிக்கு வர உள்ளனர்.
பிரதமரின் வருகையால் மக்கள் இடையூறுகளைச் சந்திக்கின்றனர். பிரதமரின் வருகைக்கு 48 மணி நேரத்துக்கு முன்பே, கடைகள் அடைக்கப்பட்டன. வேலைக்குச் செல்பவர்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்பவர்கள் சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
இருப்பினும், புதுச்சேரி நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில், பிரதமர் மோடி ஒரு அரசு நிகழ்ச்சியில் உரையாற்றினார். அது உற்சாகமற்று காணப்பட்டது” எனத் தெரிவித்தார்.