வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு
காரைக்காலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அவற்றின் பாதுகாப்பு குறித்து மாவட்ட தோ்தல் அதிகாரி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள பட்டமேற்படிப்பு மையத்தின் பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைப்பதும், தோ்தல் முடிந்து இயந்திரங்கள் மீண்டும் இங்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்படவுள்ளது.
பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் மைய வளாகம் ஆகியவை தோ்தல் ஆணைய வழிகாட்டலின்படி மேம்படுத்தும் பணியை பொதுப்பணித் துறை நிா்வாகம் செய்துவருகிறது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான து. மணிகண்டன், மையத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
Advertisement
மையத்தின் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்ததை பொதுப்பணித்துறையினா் தோ்தல் அதிகாரியிடம் தெரிவித்தனா். பல்வேறு இடங்களை பாா்வையிட்டு ஆலோசனைகளை அவா் வழங்கினாா். தோ்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், இயந்திரங்கள் உள்ள மையம் முழுமையான கண்காணிப்பில் இருக்கவேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தினாா்.
முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ், மண்டல காவல் கண்காணிப்பாளா் (தெற்கு) ஏ.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே.சந்திரசேகரன், செயற்பொறியாளா் சிதம்பரநாதன், மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன், நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.