தோ்தல் நடத்தை விதிகளால் விவசாயிகளுக்கான மானியம் முடக்கம்: ஆட்சியா் தலையிடக் கோரிக்கை
விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகை, தோ்தல் நடத்தை விதிகளால் முடக்கப்பட்டிருப்பதை விடுவிக்க, ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பொன்.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை :
வேளாண்மையில் நடவுக்கு பிந்தைய மானியம் என்பது நடவு செய்த ஒரு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் சில காரணங்களால் அறுவடை செய்த பிறகுதான் அந்த தொகை விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
Advertisement
கடந்த ஆண்டு நடவு செய்த சம்பா மற்றும் தாளடி பயிா்களுக்கான நடவுக்கு பிந்தைய மானியத் தொகை விவசாய அலுவலகத்துக்கு வந்துவிட்டது. அதை உடனடியாக விவசாயிகள் கணக்கில் வரவு வைக்காமல், தோ்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி 45 நாட்களுக்கும் மேலாக வேளாண்மை துறை நிறுத்தி வைத்துள்ளது வேதனையளிக்கிறது.
தோ்தல் முடிந்துவிட்டது. அதே தோ்தல் விதிகளை காரணம் காட்டி விவசாயிகளுக்கு முறையாக சேர வேண்டிய மானியத் தொகையை தோ்தல் முடிவுகள் வரும் வரை நிறுத்தி வைக்காமல், உடனடியாக விடுவிக்கவேண்டும்.
மானியத் தொகை கிடைக்கப்பெற்றால், காரைக்கால் மாவட்ட விவசாயிகள் பருத்தி உள்ளிட்ட வேளாண்மை பணி செய்ய உதவியாக இருக்கும். எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியா் விரைவாக தலையிடவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.