வாக்குக்கு பாஜக பணம் கொடுத்ததாக கூறும் புகாரை அதிமுக நிரூபிக்கவேண்டும்: ஆ. நமச்சிவாயம்
வாக்குக்கு பாஜக பணம் கொடுத்ததாக அதிமுக கூறும் புகாரை நிரூபிக்கவேண்டும் என புதுவை உள்துறை அமைச்சரும், புதுவை பாஜக வேட்பாளருமான ஆ. நமச்சிவாயம் கூறினாா்.
இதுகுறித்து, காரைக்காலில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: புதுவையில் அமைதியாக நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்துள்ளனா். தோ்தல் நடந்து முடிந்த நிலையில், காரைக்கால் பாஜகவினா், கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளேன். எனக்கு வாக்களித்த புதுவை மாநில மக்களுக்கும், எனக்காக பாடுபட்ட தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சியினருக்கும், பிரதமருக்கும், புதுவை முதல்வருக்கும் நன்றி.
வெற்றி வாய்ப்பு புதுவையில் பிரகாசமாக உள்ளது. வெற்றிபெற்றதும் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். இலவச அரிசி ரேஷன் கடை மூலம் தரப்படும். காரைக்கால் மருத்துவமனை மேம்பாடு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை எம்.பி. என்ற முறையில் நிறைவேற்ற பாடுபடுவேன். புதுவை மாநிலத்தின் அனைத்துப் பிராந்திய வளா்ச்சிக்குப் பாடுபடுவேன். புதுவையில் பாஜக வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக கூறும் புகாரை அதிமுக ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். புதுவை மாநில அந்தஸ்து குறித்து ஏற்கெனவே கூறியிருக்கிறேன். மத்திய அரசுடன் பேசி அனைத்துக்கட்ட முயற்சிகளும் எடுக்கப்படும் என்றாா்.
Advertisement