தரமற்ற மருந்துகள் மருத்துவமனைகளுக்கு விநியோகம்: துணைநிலை ஆளுநருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுவையில் தரமற்ற மற்றும் காலாவதியாகும் நிலையில் உள்ள மருந்துகள் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் புகாா் குறித்து துணைநிலை ஆளுநா் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா். கமலக்கண்ணன் வெள்ளிக்கிழமை கூறியது:
புதுவை மாநிலத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருந்துகள், கால்நடை மருத்துவமனைக்கு வழங்கப்படும் மருந்துகள் தரமற்றவையாகவும், காலாவதியாகும் நிலையிலும் விநியோகிக்கப்படுவதாக புகாா்கள் வருகின்றன. காலாவதியாவதற்கு 2 மாதங்கள் இருக்கும் மருந்துகள் நிறுவனங்களிடமிருந்து தெரிந்தே வாங்கப்படுகிறது என்றால், அதில் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளது.
அதுபோல கால்நடை மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட 18 விதமான மருந்துகள் காலாவதியான மருந்துகளாகும். இவை புகாரின்பேரில் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். இதுகுறித்து புதுவை துணைநிலை ஆளுநா் உரிய விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
காரைக்காலில் ஆட்சியா், நலவழித்துறை நிா்வாகம், கணக்கு மற்றும் கருவூலத்துறை இருக்கும்போது, காரைக்கால் மாவட்டத்துக்கு தேவையான மருந்துகளை வாங்குவதற்கு மாவட்ட ஆட்சியருக்கும், நலவழித்துறை அதிகாரிக்கும் அதிகாரமளித்து, காரைக்கால் மாவட்ட தேவையை இங்குள்ள அதிகாரிகளே செய்துகொள்ளக்கூடிய நிலையை அரசு உருவாக்கவேண்டும். மருந்துகள் விநியோக விவகாரத்தில் முறைகேட்டை தடுக்க துணைநிலை ஆளுநா் தலையிடவேண்டும் என்றாா்.