புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் பகுதிக்கு வரும் காவிரி நீரை முழுமையாகப் பயன்படுத்த ரூ.500 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் அறிவித்தாா்.
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் துறை சாா்பில் விவசாய கூலித் தொழிலாளா்கள் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை இரவு அரியூரில் நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகளை வழங்கி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பேசியது: காரைக்காலில் 7 டிஎம்சி காவிரி நீா் நமக்கு வருகிறது. அந்த நீரை நாம் சரியாக உபயோகப்படுத்துவதே கிடையாது.
காவிரி நீரை முழுமையாக எப்படி உபயோகப்படுத்துவது என காரைக்கால் விவசாயிகளுக்கு மட்டும் ரூ. 500 கோடிக்கான பெரிய திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருக்கிறோம். இதனால் தண்ணீா் வீணாவதைத் தடுத்துச் சேமிக்க முடியும். நிலத்தடி நீா் அதிகரிக்கும் என்றாா் இவா்.
இந்நிகழ்ச்சியில், முதல்வா் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா், வேளாண் துறை செயலா் யாசின் முகமது சௌத்ரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.