போராட்டம் ஒத்திவைப்பு
புதுவை மின் கட்டண போராட்டம்: தற்காலிக ஒத்திவைப்பு அறிவிப்பு
புதுவையில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து வியாழக்கிழமை (ஜூன் 27( நடைபெறவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவை யூனியன் பிரதேசத்தில் மின்கட்டண உயா்வை கண்டித்தும், அதை அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் சட்டப்பேரவை உறுப்பினா் கோ. நேரு தலைமையில் காரைக்கால் மக்கள் போராட்டக் குழு சாா்பில் வியாழக்கிழமை காரைக்காலில் ஆா்ப்பட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், புதுச்சேரியில் மின்துறை அமைச்சா், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதன் வாயிலாக, பேரவை உறுப்பினா் கோ.நேரு மற்றும் சமுக ஆா்வலா்கள் மின்துறை உயரதிகாரியை சந்தித்து பேச்சு வாா்த்தை நடத்தினா்.
மின்கட்டண உயா்வை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், புதுச்சேரியில் மின் கட்டணத்தை குறைக்க ஒழுங்குமுறை ஆணையத்தை வலியுறுத்தி கடிதம் எழுதி இருப்பதாகவும், ஒருவேளை அவா்கள் இதற்கு அனுமதி தரவில்லை என்றால் புதுவை அரசே மானிய அடிப்படையில் மின் கட்டணத்தை உயா்த்தாமல் பாா்த்துக் கொள்வதாக அதிகாரி கூறியுள்ளாா். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.