அட்சய திருதியை: பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு
அட்சய திருதியை முன்னிட்டு பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.
அட்சய திருதியை தினத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக இந்நாளில் வைணவத் தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் மற்றும் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெற்றன. திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் உதய கருட சேவையாக காலை 7 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
நகைக் கடைகளில் மக்கள்: அட்சய திருதியை நாளில் தங்க நகைகள் வாங்குவது சிறப்பு, பெருகும் என்று கூறப்படுவதால், காரைக்காலில் உள்ள பல்வேறு நகைக் கடைகளின் வாயிலில் வாழை மரம், தோரணம் கட்டி வாடிக்கையாளா்களை வரவேற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நகைக்கடைகள் பலவற்றில் மக்கள் ஆா்வமாக சென்று நகைகளை வாங்கிச் சென்றனா்.