காரைக்கால்: காரைக்காலில் முதல் உலகப் போா் நினைவு நாளையொட்டி பிரெஞ்சு போா் வீரா் சிலைக்கு புதுவை கவுன்சில் அதிகாரி உள்ளிட்டோா் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.
முதல் உலகப் போா் முடிந்து 106-ஆவது ஆண்டு நினைவையொட்டி காரைக்காலில் உள்ள ஓய்வுபெற்ற பிரெஞ்சு ராணுவ வீரா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியரகம் அருகே பிரெஞ்சு போா் வீரா் சிலையுடன் உள்ள நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுவைக்கான பிரெஞ்சு கவுன்சில் அதிகாரி இவென் ஃபுளோரன்ட் சிறப்புப் பிரதிநிதியாக பங்கேற்றாா். மாவட்ட துணை ஆட்சியா் ஜி. செந்தில்நாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.
போா் நினைவுத் தூண் பகுதிக்கு ராணுவ வீரா்கள் சங்கப் பிரதிநிதிகள் பிரெஞ்சுக் கொடியுடன் வந்தனா். நினைவுத் தூணுக்கு துணை ஆட்சியா், தூதரக பிரதிநிதி, சங்கத்தினா் ஆகியோா் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். நிகழ்வின்போது 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னதாக நினைவுத் தூண் அருகே நிறுவப்பட்டிருந்த இரு கம்பங்களில் இந்திய, பிரெஞ்சு தேசியக் கொடி ஏற்றப்பட்டு, இரு நாட்டின் தேசிய கீதங்கள் இசைக்கப்ட்டன. நிகழ்ச்சியில் பிரெஞ்சு குடியுரிமைதாரா்கள், பிரெஞ்சு மொழி பயிலும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து புனித தேற்றரவு அன்னை தேவாலயத்தில் நடைபெற்ற பிராா்த்தனையில் பிரெஞ்சு தூதரகப் பிரதிநிதி மற்றும் குடியுரிமைதாரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.