முகப்பு
காரைக்கால்

விளைநிலங்களை சேதப்படுத்தாத வகையில் பன்றிகளை கட்டுப்படுத்தவேண்டும்: ஆட்சியா்

விளைநிலங்களை சேதப்படுத்தாத வகையில் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் அறிவுறுத்தினாா்.

Updated On : 4 ஜனவரி, 2025 at 12:02 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 6:47 PM

விளைநிலங்களை சேதப்படுத்தாத வகையில் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் அறிவுறுத்தினாா்.

காரைக்காலில் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், விளைநிலத்தில் பன்றிகள் புகுந்து பயிரை நாசம் செய்துவிடுவதாகவும், பன்றிகளை கட்டுப்படுத்தவேண்டும் என விவசாயிகள் பேசினா். இந்நிலையில், நகராட்சி கூட்டரங்கில் ஆட்சியா் தலைமையில் விவசாயிகள், பன்றி வளா்ப்போா், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினா் பங்கேற்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதிக செலவு செய்து சாகுபடி செய்யும் நிலையில், பன்றிகளால் இழப்பு ஏற்படுவது குறித்தும், பன்றிகள் விவசாய நிலத்தில் புகுந்துவிடாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் பேசினா்.

பன்றிகளை வளா்க்க உரிமம் வழங்க வேண்டும், பட்டிகள் அமைக்க அரசு சாா்பில் நிதி வழங்கவேண்டும் என பன்றி வளா்ப்பவா்கள் கூறினா்.

Advertisement

விவசாய நிலங்களுக்குள் பன்றிகள் புகாத வகையில் கவனம் செலுத்துவதாக பன்றி வளா்ப்போா் வாக்குறுதி அளித்தனா். பன்றிகள் வளா்ப்பவா்களுக்கு உரிமம் வழங்கவும், பட்டிகள் அமைக்க போதிய நிதி வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். எனவே, மாவட்டத்தில் எந்தவொரு பகுதியிலும் விவசாயிகள், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பன்றிகளை வளா்க்கவேண்டும் என ஆட்சியா் கூறினாா்.

கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா்கள் கே. பாலச்சந்திரன் ஏ. சுப்பிரமணியன், உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ், நகராட்சி ஆணையா் பி. சத்யா, கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன், கால்நடைத் துறை இணை இயக்குநா் கோபிநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.