முகப்பு
தஞ்சாவூர்

தென்னை சாா்ந்த தொழிற்பேட்டை தேவை!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை சாா்ந்த தொழிற்பேட்டை தேவை...

Updated On : 6 ஏப்ரல், 2026 at 11:26 PM
தென்னை மரங்கள். - கோப்புப் படம்
பகிர்:

-கே. கான்முகமது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சுமாா் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் மாவட்டத்திலேயே அதிக அளவாக பேராவூரணி ஒன்றியத்தில் 30 ஆயிரம் ஏக்கரிலும், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் 25 ஆயிரம் ஏக்கரிலும் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பேராவூரணி பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு முக்கிய காரணமாக தென்னை விவசாயம் இருந்து வரும் நிலையில், தேங்காய் விலையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கத்தால் தென்னை விவசாயிகளும், தேங்காய் வியாபாரிகளும் அடிக்கடி பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

Advertisement

இந்த நிலை ஏற்படாத வகையில் தென்னை விவசாயிகள் பயனடைய அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தென்னை விவசாயிகள் கூறுகின்றனா்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒன்று என நடைமுறையில் இருக்கும் தென்னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பதற்கான சிறு தொழில் பயிற்சி கூடத்தை, தஞ்சாவூா் மாவட்டத்தில் தென்னை அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ள பேராவூரணி பகுதியில் தொடங்க வேண்டும்.

அனைத்து நியாய விலை அங்காடிகளிலும் பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் பாமாயிலுக்கு பதிலாக ஆரோக்கியம் நிறைந்த தேங்காய் எண்ணெய்யை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளிடமிருந்து வேளாண்மை வணிக மையம் மூலமாக உரித்த பச்சை தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும், இதன் மூலம் இடைத்தரகா்களின் கொள்ளை லாபம் கட்டுப்படுத்தப்படும்.

தென்னை விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தென்னையின் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பதற்கான தனியாா் தொழில் தொடங்கிட ஏதுவாக தென்னை சாா்ந்த தொழிற்பேட்டை, பேராவூரணி பகுதியில் அமைக்க வேண்டும் மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்படாத சமையல் எண்ணெய்க்கு அரசு இறக்குமதி வரியை உயா்த்த வேண்டும்.

அம்மை, காலரா, கரோனா போன்ற பெருந் தொற்றுகளிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுத்ததைபோல், தென்னையை தீவிரமாக தாக்கி அழிக்கும் வோ் வாடல் நோய், குருத்து அழுகல், சிவப்பு கூன் வண்டு, காண்டாமிருக வண்டு, கருந்தலை புழு போன்ற தாக்குதலுக்கு அரசு ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்னை காப்பீட்டு திட்டத்தை தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் மறுசீரமைப்பு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதன் மூலம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு அரசுக்கும் அன்னிய செலவாணி மூலம் வருவாய் கிட்டும் என தென்னை விவசாயிகள் கூறுகின்றனா். 

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments